கர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்!
Recommended Video
சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது ஒரு பெண்மணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
15 பேர் பலி
இதில் 15 பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து
இதனிடையே விஷம் கலந்தது ஒரு பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாதத்தில் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது என்பது உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலாளர் மனைவி
பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது அம்பிகா என்ற பெண் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் அந்த கோவிலின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவியாகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். மாதேஷை திருமணம் செய்த பிறகு இந்த கிராமத்தில் வந்து தங்கியுள்ளார்.
பூசாரிக்கு அவப்பெயர்
கோவில் மற்றும் அது சார்ந்த மடத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுக்க வேண்டுமானால், பூஜாரிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்பிகாதான் விஷம் கலந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளாராம். பூஜாரி அஜாக்கிரதையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்பதால், அம்பிகா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.