கர்நாடகாவில் கனமழையால் நிரம்பிய கபினி - 25ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பால் காவிரியில் பெருகிய வெள்ளம்
மைசூர்: தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி அணை நிரம்பி வழிவதால் உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்டபகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 104.75 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 ஆயிரத்து 986 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரத்து 592 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேகதாது அணை.. காவிரி நதிநீர் ஆணையத்தில்.. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு
நீடிக்கும் மழை
கபிலா ஆறு உற்பத்தியாகும் கேரளாவின் வயநாட்டிலும் கனமழை தொடர்வதால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் மைசூரு மாவட் டத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
நிரம்பிய கபினி அணை
கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2,283.85 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 129 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது. அங்கிருந்து விநாடிக்கு 23 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளம்
கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேகேதாட்டு, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம்
காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரும் அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் தற்போது 72.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 34.93 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் விரைவில் மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.