களம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை
Recommended Video
மைசூர்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகன் நிகில் கவுடாவுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்துள்ள அம்பரீஷ் மனைவி சுமலதாவை ஜாதி ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டது மதசார்பற்ற ஜனதாதளம்.
மைசூர், மண்டியா, ராம்நகரம், பெங்களூர் ஊரகம், தும்கூர், ஹாசன் ஆகிய கர்நாடகாவின், தென் மாவட்டங்ளில் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற கட்சிக்கு செல்வாக்கு அதிகம்.
இதற்கு முக்கிய காரணம், இங்கெல்லாம் பெரும்பான்மை ஜாதியாக ஒக்கலிகர்கள் (கவுடா) இருப்பதுதான். அவர்கள்தான் ம.ஜ.த கட்சியின் உயிர்நாடி.
அடிபட்ட சிங்கத்தோட மூச்சு.. யாருக்கு பிரச்சாரம் செய்யும் தெரியுமா? தேர்தல் களத்தில் கேஜிஎப் ஹீரோ!
குமாரசாமி மகன்
இந்த லோக்சபா தேர்தலில், மண்டியா தொகுதியிலிருந்து கர்நாடக முதல்வரும், மஜத முக்கிய தலைவருமான எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் கவுடா களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி பிரமுகரான முன்னாள் அமைச்சரும், நடிகருமான, அம்பரீஷ், "மண்டியாத கண்டு" (மண்டியாவின் ஆண் மகன்) என்று அழைக்கப்பட்டவர். அவரால்தான் மண்டியா மாவட்டத்தில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருந்தது. அம்பரீஷ் சமீபத்தில் மறைந்துவிட்ட நிலையில், மண்டியா மாவட்டத்தை தங்கள் ஒருவருக்கே உரிய கோட்டையாக மாற்ற மஜத மும்முரம் காட்டி வருகிறது.
சுமலதா அதிரடி
அம்பரீஷ் மறைவால் மண்டியா தங்களின் கோட்டை என நினைத்த மஜதவுக்கு, அம்பரீஷ் மனைவி சுமலதா ஷாக் கொடுத்துள்ளார். சுயேச்சையாக களமிறங்கியுள்ள அவருக்கு பாஜக ஆதரவு அளித்து தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இது ஒருபக்கம் என்றால், நடிகர்கள் யஷ் மற்றும் தர்ஷன் இருவரும் மஜதவை இன்னும் கொஞ்சம் அதிகம் சீண்டிவிட்டனர்.
களம் கண்ட யஷ்
கேஜிஎப் திரைப்பட கதாநாயகனான யஷ், மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். ஒக்கலிக ஜாதிக்காரர். அவருக்கென மண்டியாவில் பெரும் ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. ஊர், ஜாதி இரண்டும் இதற்கு முக்கிய காரணம். தர்ஷன் பலிஜா நாயுடு ஜாதிக்காரர் என கூறப்பட்டாலும், பெரும்பாலான கன்னட மக்கள் அவரை ஒக்கலிக ஜாதிக்காரராகத்தான் பார்க்கிறார்கள். இவர்கள் இருவருமே சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சார களத்திற்கு வந்துவிட்டதால், நிகில் கவுடாவுக்கு நடுக்கம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஜாதி அட்டாக்
இந்த நிலையில்தான், சுமலதா ஜாதியை முன்வைத்து, பிரச்சாரத்தில் அனலை அள்ளி கொட்ட ஆரம்பித்துள்ளனர், மஜத கட்சி பிரமுகர்கள். அக்கட்சி எம்பியான சிவராமே கவுடா தனது பிரச்சாரங்களின்போது, 'சுமலதா நாயுடு' என்றே அழைக்கத் தொடங்கியுள்ளார். சுமலதா ஆந்திராவை சேர்ந்தவர், நாயுடு ஜாதிக்காரர். மஜத வேட்பாளருக்குத்தான் ஒக்கலிகர்கள் ஓட்டு போட வேண்டும் என்பதை இப்படி மறைமுகமாக சொல்லத் தொடங்கியுள்ளார் அவர்.
ஆந்திராவிலிருந்து வந்தவர்
முதலில் அவரது பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என கூறிவந்தனர் மஜத மேலிடத் தலைவர்கள். ஆனால் இப்போது, அக்கட்சி எம்எல்ஏவான ஸ்ரீகாந்தேகவுடாவும், சுமலதாவை ஜாதி ரீதியாக தாக்க ஆரம்பித்துள்ளார். சுமலதா ஒரு கவுடத்தி (கவுடா பெண்) கிடையாது. ஆந்திராவிலிருந்து வந்தவர் என்று பகிரங்கமாக பிரச்சாரங்களில் பேச ஆரம்பித்துள்ளார். எல்லாம் நிகில் கவுடாவுக்காகத்தான்.
வெளியே வேறு, உள்ளே வேறு
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? இவ்விரு தலைவர்களுமே, தங்கள் சொந்த வாழ்க்கையில் புரட்சியாளர்களாக காட்டிக் கொண்டவர்கள். சிவராமே கவுடா தனது பிள்ளைகள் வேற்று ஜாதியை சேர்ந்தவர்களுடன் திருமணம் செய்ய சம்மதித்தவர். போலவே, மஜதவை சேர்ந்த அமைச்சரான டி.சி.தம்மண்ணா பிள்ளைகளும் ஜாதி கலப்பு திருமணம் செய்தவர்கள். ஆனால், அரசியல் என்று வரும்போது ஜாதியை முன்னிறுத்துகிறார்கள். வெற்றி பெற வேண்டும், என்பதற்காக மஜத தலைவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டனர் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன.