பாஜகவுக்கு தாவிய மாஜி எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு.. குடும்பத்தாரும் தப்பவில்லை.. கர்நாடகாவில் ஷாக்
மைசூர்: தங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தற்போது, பாஜக சார்பில் போட்டியிடும், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ, நாராயண கவுடா மீது, பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் செருப்பால் வீசி கட்சித் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தொகுதியிலிருந்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் கடந்த வருடம் நடந்த பொதுத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாராயண கவுடா. இந்த நிலையில், இவர், திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மும்பை ரிசார்ட்டில் போய் தங்கிக்கொண்டார்.
இப்படி காங்கிரஸ், மஜத ஆகிய 2 கட்சிகளையும் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கலைந்தது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாராயண கவுடா, இப்போது பாஜகவில் இணைந்து அதே தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று அவர் தேர்தல் அலுவலகம் சென்றபோது, மதசார்பற்ற ஜனதாதளம் தொண்டர்கள் சிலர், நாராயண கவுடா மீது, செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவருடன் சென்ற குடும்பத்தார் மீதும் செருப்புகள் விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏ பதவி ராஜினாமா.. இப்போ பாஜக சார்பில் போட்டி.. கோபாலய்யா மீது மஜத கோபம்.. வீழ்த்த செம வியூகம்
இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணகவுடா கூறுகையில், செருப்புகளை வீசும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள். இந்த தொகுதி மக்களுக்கு நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். அவர்கள் எனக்கு மறுபடியும் ஓட்டு போடுவார்கள். முதல்வராக எடியூரப்பா இருப்பதால், ஆளும் கட்சி சார்பில் எம்எல்ஏவாகி, மக்களுக்கு இன்னும் பல நல்ல பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். கட்சித் தாவி பாஜக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏக்களுக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய போகும்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.