தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்
மைசூர்: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் மண்டியா விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கு கர்நாடக உடனடியாக காவிரியில் 9.19 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் போதிய அளவிற்கு நீர் இருப்பு இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று காவிரி பாசனத்தை நம்பி உள்ள அந்த மாநில விவசாயிகள் போர்க்குரல் எழுப்பி உள்ளனர்.
இன்று மாலை மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதுபற்றி பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, போதிய அளவுக்கு மழை பெய்து அணைகளில் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இப்போது கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இப்போது எவ்வாறு தண்ணீரை திறந்து விட முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி
அமைச்சர் புட்டராஜு கூறுகையில், கர்நாடக நிலைமை தெரியாமல், டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தால் எப்படி செயல்படுத்த முடியும்? தமிழக அணைகளில் தண்ணீர் இருந்தாலும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற வேண்டும் என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் நோக்கம். எப்போதும் அவர்களுக்கு இதே வேலைதான்.
தர்மஸ்தலா போன்ற, புண்ணியத் தலங்களில் கூட குடிக்க நீர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. காவிரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளின் பயிர்கள் வாடியுள்ளன, என்றார்.