கர்ப்பிணி மனைவி உட்பட குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்று தொழிலதிபர் தற்கொலை.. பகிர் காரணம்!
மைசூர்: தொழிலதிபர் ஒருவர் தாய், தந்தை, மனைவி, மகன் ஆகிய 4 பேரையும் நெற்றியில் குறிவைத்து சுட்டுகொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். 38 வயதான ஒம் பிரகாஷ்க்கு 28 வயதில் நிகிதா என்ற மனைவியும் 5 வயதில் ஆர்ய கிருஷ்ணா என்ற மகனும் இருந்தனர். ஓம் பிரகாஷ் மைசூரில் உள்ள கொட்டிக்கெரே லேஅவுட்டில் தாய், தந்தை, மனைவி, மகன் என வசித்து வந்தார்.
ஓம்பிரகாஷ் டேட்டா பேஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இந்த நிறுவனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. இதனால் நஷ்டமடைந்த ஓம் பிரகாஷ் பின்னர் அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
நார்வேயிலிருந்து நல்ல செய்தி.. ஒரு வாரத்துக்கு கனமழை.. இனி ஆஃப் மோடுக்கு செல்லும் பேன், ஏசி!
பெரும் நஷ்டம்
நடிகர் ராஜ்குமாரின் பழைய படங்களை அனிமேஷன் செய்யும் நிறுவனத்தை நடத்திய அவர் இதற்காக 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்துடன் யாத்திரை
இந்த நிலையில் கடந்த வாரம் ஓம்பிரகாஷ் தனது தாய், தந்தை, மனைவி, மகன் ஆகியோருடன் கோவில்களுக்கு யாத்திரை சென்றுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குண்டல் பேட்டைக்கு சென்ற அவர் அங்குள்ள லாட்ஜில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
நெற்றியில் குறிவைத்து
நேற்று காலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரை எழுப்பி கொட்கெரே லேஅவுட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த இரட்டை வேப்ப மரம் அருகே அவர்களை அழைத்து சென்ற ஓம்பிரகாஷ், தாய், தந்தை, மனைவி, மகன் என நான்கு பேரையும் நெற்றிப்பொட்டில் குறி வைத்து சுட்டுள்ளார்.
தற்கொலை
இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் ஓம் பிரகாஷும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். துப்பாக்கி சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு அச்சத்தில் ஓடி வந்தா ஓம்பிரகாஷின் டிரைவர், 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலங்களாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நண்பருக்கு தகவல்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில் ஓம்பிரகாஷ், தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது நண்பர் ஒருவருக்கு போனில் பேசியுள்ளார்.
தொழிலில் துரோகம்
அப்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், சிலர் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி வேதனைப்பட்டுள்ளார் ஓம்பிரகாஷ். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறியிருக்கிறார் ஓம்பிரகாஷ்.
நிறைமாத கர்ப்பிணி
ஓம்பிரகாஷ் துப்பாக்கியால் சுட்டபோது அவரது மனைவி நிகிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை ஓம்பிரகாஷ் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பது அவரது உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.