அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்
Recommended Video
மைசூர்: கர்நாடகாவின் ஹுப்ளியில் அம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலோடு பாஜக தலைவர்கள் மாலை அணிவித்து சென்றதால், 101 லிட்டர் பால் ஊற்றி அபிஷேகம் செய்து தலித் அமைப்புகள் தீட்டுக்கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏப்ரல் 14ம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 129வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு, மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்கள்.
அப்படித்தான் கர்நாடகாவின் ஹுப்ளி போஸ்ட் ஆபிஸ் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பிரகலாத் ஜோஷி எம்பி தலைமையில் பாஜக மாநில தலைவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஆனால் அவர்கள் செருப்பு காலுடன் சென்று மாலை அணிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தலித் அமைப்புகள் பாஜகவினரை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தின. இதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து ஒரு டேங்கர் லாரி நிறைய தண்ணீரை வரவழைத்து அம்பேத்கர் சிலையையும், சிலை நிறுவப்பட்டிருந்த வளாகத்தையும் சுத்தம் செய்தனர். பின்னர் 101 லிட்டர் பாலை ஊற்றி அம்பேத்கர் சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
முன்பு ஒரு முறை பாஜகவினர் பிரியங்கா காந்தி வந்தததால் தீட்டு ஆகிவிட்டதாக வாரணாசியின் லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தை சுத்தம் செய்தனர். இப்போது தலித் அமைப்பினர் பாஜக தலைவர்களை கண்டிக்கும் விதமா தீட்டு என சுத்தம் செய்து இருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.