மைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி
Recommended Video
மைசூரூ: தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே மைசூரூஅன்னை சாமுண்டீஸ்வரிதான். நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த வேலையில் பத்து நாட்கள் தசரா திருவிழாவாக மைசூருவில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது சிறப்பு.
தசரா பண்டிகை கொண்டாடும் இந்த நாட்களில் மைசூரூ மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மகாராஜா அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைத்திருக்கிறார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள்.
மைசூரூ நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. தேவர்களால் சாந்தமான அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். அமர்ந்த கோலத்தில் இன்றும் அன்னை சாமுண்டி அருளாசி வழங்கி வருகிறாள். அழகிய சாமுண்டி மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி எழிலுடன் காட்சி தருகிறார்.
அன்னை சாமுண்டீஸ்வரி
ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரூ என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை வதம் செய்து இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக புராண கதைகள் சொல்கின்றன.
மகிஷனை சம்ஹரித்த சாமுண்டீஸ்வரி
மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை தமிழகம், கர்நாடகாவை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை. மகிஷனை சம்ஹரித்த காலம் அறிய முடியாத காலம் தொடங்கி இன்று வரை பல மாற்றங்களை மைசூரு கண்டு வந்தாலும் அங்கு மாறவே மாறாத ஒரே சக்தியாக தேவி சாமுண்டீஸ்வரி விளங்குகிறாள்.
மைசூரு மன்னர்களின் குல தெய்வம்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தன் அன்னைக்கு திருப்பணி செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1573ம் ஆண்டு நான்காம் சாமராஜ உடையார் மைசூரூ நகரை ஆண்டு வந்தார். இவரின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியின் ஆலயத்தை தரிசித்து விட்டு திரும்பும்போது மழையும் இடியும் சூழ்ந்து கொண்டது. அப்போது மன்னரையும் அவரது ஆட்களையும் காப்பாற்றிய அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்க மைசூரின் எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக சாமுண்டீஸ்வரி ஆலயத்தை விரிவாக எழுப்பினார். 3486 அடி உயரத்தில் கொலு வீற்றிருக்கும் இந்த சாமுண்டீஸ்வரி கோயிலை 1872ஆம் ஆண்டு கிருஷ்ணராஜா உடையார் புனரமைத்து விரிவாக்கினார்.
பெண்ணால் மரணம்
சிவனை நோக்கி தவமிருந்தான் மகிஷாசூரன். தவத்தை மெச்சிய சிவன் வரம் கொடுத்தார். தனக்கு பெண்ணால் மட்டுமே மரணம் வரவேண்டும் என்று வரம் கேட்க அப்படியே வரம் கொடுத்தார் சிவன். என்ன ஓரு ஆணவம், பெண்ணின் சக்தியை தவறாக எடை போட்டான் மகிஷாசூரன்.
சிவனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் பெண்ணைத் தவிர தனக்கு மரணமில்லை என்பதால் அவனது அட்டகாசம் தாங்கமுடியவில்லை.
அன்னையின் அவதாரம்
மகிஷனை அழிக்க தேவர்கள் முயற்சி செய்தனர். சிவனிடம் முறையிட்டனர். உடனே பெண்ணால் அந்த அசுரனை அழிக்க முடியும் என்று கூறினார். தேவர்கள் அன்னை பார்வதியை வேண்டினர். ஆடிமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அன்னை சாமுண்டியாக மஹிசூரில் அவதரித்தார்.
சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள்.
அசுர வதம்
ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மகிஷாசுரனுடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார். அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.
ஜம்பு சவாரி
பிரம்மாண்ட ராஜகோபுரம் வரவேற்க கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது
தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே மைசூரு அன்னை சாமுண்டீஸ்வரிதான். மகிஷனை அழித்து வெற்றி பெற்ற அன்னையை கொண்டாடும் விதமாகவே பத்து நாட்கள் தசரா திருவிழாவாக மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விஜயதசமி தினத்தன்று அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீதேறி சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் அமர்ந்து பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும்.