மைசூர் தசரா கோலாகலம்.. 750 கிலோ சாமுண்டீஸ்வரி அம்மன் அம்பாரியை சுமந்த அர்ஜுனா யானை!
Recommended Video
மைசூர்: உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
'மைசூரு தசரா எஸ்டொந்து சுந்தரா' அதாவது, மைசூரு தசரா, என்ன ஒரு அழகு, என்ற ஒரு வாக்கியம் கர்நாடகாவில் ரொம்பவே புகழ்பெற்றது. அந்த அளவிற்கு கர்நாடகா மட்டுமில்லாது தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட மைசூரு தசரா விழாவை நேரில் காணுவதற்கு பக்தர்கள் செல்வர்.
வெளிநாட்டு பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்கூட, திரளாக இதில் பங்கேற்று சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்வார்கள் என்பது மற்றொரு சிறப்பு அம்சம் ஆகும்.
மைசூரு தசரா நவராத்திரி விழா செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்வான அம்பாரி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி 15 நிமிடங்களுக்கு நந்தித்வஜா பூஜையை முதல்வர் எடியூரப்பா பலராமா கேட் பகுதியில் வைத்து நடத்தினார். இதையடுத்து தசரா பேரணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
750 கிலோ எடை கொண்ட அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்பட்டு, அர்ஜுனா என்ற யானை அதை சுமந்து வர அம்மனுக்கு மலர்களை தூவி வணங்கினார் முதல்வர் எடியூரப்பா. எட்டாவது முறையாக அர்ஜுனா என்ற இந்த யானைக்கு அம்பாரியை, சுமக்கக் கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது.
அம்மன் சிலையை சுமந்தபடி அர்ஜூனா யானை முன் செல்ல, அதன் பின்னால் பல்வேறு மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் அரசுத் துறையை சேர்ந்த 38 அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு வழியாகச் சென்று நிறைவாக 'பண்ணிமண்டபம்' பகுதியை அடையும்.
இரவு 7 மணியளவில் பண்ணிமண்டபம் மைதானத்தில் ஆளுநர் வஜுபாய் வாலாவிற்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்குவார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுமார் 32 ஆயிரம் மக்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் ஒன்றுதிரண்டுள்ள, உள்ள நிலையில் மைசூர் நகரில் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.