Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்
மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி ஷூட்டிங்கின்போது நடிகர் ரஜினிகாந்த் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைசூர்: மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி ஷூட்டிங்கின்போது நடிகர் ரஜினிகாந்த் லேசான காயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை திரும்பினார்.
டிஸ்கவரி சேனல் நடத்தக்கூடிய பிரபலமான நிகழ்ச்சி மேன் vs வைல்ட். சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வனப்பகுதியில் விலங்குகளுடனும், பறவைகளுடனும், இணைந்து, பிரபலங்கள் வாழும் வகையில் இந்த நிகழ்ச்சி சூட்டிங் செய்யப்படும். பிரபல பிரிட்டிஷ் நாட்டு வன வல்லுநரும், சாகசக்காரருமான பியர் கிரில்ஸ் வனப்பகுதிக்குள் இருந்தபடி இந்த நிகழ்ச்சியை நடத்துவார்.
நடிகர் ரஜினிகாந்த் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவரை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம், பந்திப்பூர் வனப்பகுதிக்குள் வைத்து ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடம். காப்பு காடுகள் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா இருவரும் விமானத்தில் நேற்று சென்னையில் இருந்து மைசூர் புறப்பட்டு சென்றனர். அவர் பயணித்த விமானம் ஆரம்பத்திலேயே இயந்திரக் கோளாறு காரணமாக சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அப்போதே ஏதோ ஒரு தடங்கல் என்பதை ரஜினி ரசிகர்கள் உணர்ந்தனர்.
இந்த நிலையில்தான் பந்திப்பூர் வனப்பகுதியில் இன்று ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து இன்றைய தினம் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை ஷூட்டிங் நடத்துவதற்கு அனுமதி தரப்படவில்லை என்று கர்நாடக வனத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ரஜினிகாந்த் இன்று இரவே சென்னை திரும்பினார்.
Sources: Actor Rajinikanth has suffered minor injuries during the shooting of an episode of 'Man vs Wild' with British adventurer Bear Grylls, at Bandipur forest in Karnataka. (file pics) pic.twitter.com/uQxsHCTkCb
— ANI (@ANI) January 28, 2020
அடுத்ததாக வரும் 30ஆம் தேதி ஷூட்டிங் நடத்திக்கொள்ள கர்நாடக வனத்துறை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. அன்றைய தினம் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் உடல்நிலை ஒத்துழைக்குமா, என்பது இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று இரவு 10.30 மணியளவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ரஜினிகாந்த். அப்போது தனக்கு சூட்டிங்கில் பெரிய விபத்து ஏற்பட்டதை போல வெளியான செய்தி தவறானது என்றும், புதரில் இருந்த முள்தான் காலில் குத்தியது, பெரிய காயம் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் முதல்கட்ட சூட்டிங் முடிந்ததால் சென்னை வந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
28 மற்றும் 30ம் தேதிகளில் தலா 6 மணி நேரம் மட்டுமே இந்த சூட்டிங் நடத்தப்பட வேண்டும் என்பது கர்நாடக வனத்துறை உத்தரவு ஆகும். எனவே முள்குத்திய காயம் அதற்குள் சரியாகிவிடுமா என்று, படக்குழு பெரும் குழப்பமடைந்துள்ளது. இதனிடையே, சூட்டிங் துவங்கும் முன்பாக, கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பலரும், ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அந்த படங்கள் வெளியியாகியுள்ளன.