கர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது
Recommended Video
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாவட்டம் சமராஜ் நகர் பகுதியில் உள்ள என்ற சுலிவாடி கிராமத்தில், கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது.
இந்த கோயிலின் கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, அனைவருக்கும் கோயிலில் பிரசாதமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது.
மயக்கம், வயிற்றுவலி
ஆனால் பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரசாதம் சாப்பிட்டவர்கள் கொஞ்ச நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி என அவதிக்கு உள்ளாயினர்.
15 பேர் பலி
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 82 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், நேற்று இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.
மாதிரி பரிசோதனை
இது தொடர்பாக ஹானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாத மாதிரி பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் உணவு நச்சு காரணமாகத்தான் பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன் தகராறு
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 2 கோஷ்டியினர் இடையே கோயில் நிர்வாக பொறுப்புகளில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ரூ. 5 லட்சம் நிவாரணம்
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார் . அத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தும் சென்றார்.
பூசாரிக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கிருஷ்ணகிரியை சேர்ந்த காலப்பா என்ற பூசாரியை பிடிப்பதற்காக போலீசார் கிருஷ்ணகிரி விரைந்துள்ளனர்.