ப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்!
மைசூர்: பந்திப்பூர் சாலை வழியாக இரவு நேரத்தில் வாகனங்களை இயக்குவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் சாலை வழிகளில் பந்திப்பூர் சாலை மிக முக்கியமானது ஆகும். மைசூரில் இருந்து வயநாட்டிற்கு இந்த சாலை செல்கிறது. இடையில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பந்திப்பூர் காடு வழியாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காடு பாதி கேரளாவிலும், பாதி கர்நாடகாவிலும் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும். விலங்குகள் பேருந்து, கார்களில் மோதி பலியாக கூடாது என்பதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும். ஆனால் தற்போது இந்த போக்குவரத்து நிறுத்தத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கூட பேருந்துகள் அனுமதிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளரும், வனவிலங்கு பாதுகாப்பு நிபுணருமான ஜோசப் ஹூவர் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில், முக்கியமாக வயநாட்டில் இருக்கும் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
பந்திப்பூர் காட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரவு நேரத்தில் பேருந்துகளை அனுமதிக்க கூடாது சாலையை மூட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதில் நிறைய முறையற்ற தன்மை நிகழ்ந்து வருகிறது. அடிக்கடி இந்த விதிகள் மீறப்படுகிறது. பந்திப்பூர் சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல் காலை நேரத்திலும் போக்குவரத்தை தடை செய்ய வழி இருக்கிறதா என்று பார்க்கும்படி கூறியது. ஆனால் இரண்டு மாநில எம்எல்ஏக்கள் சேர்ந்து ஆலோசனை செய்ததில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்தை தடை செய்யலாம் என்று முடிவானது. அதன்படி இரவு 9 முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 2009ல் இருந்தே இது அமலில் இருக்கிறது.
ஆனால் திடீர் என்று இதில் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. இதை சிலர் அரசியலாக்கி வருகிறார்கள். இரவு நேரத்தில் முறையற்று வாகனங்களை அனுப்பி வருகிறார்கள். நாம் இப்போது மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். நம்முடைய சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கேரளாவில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது, நிலச்சரிவு ஏற்பட்டது, மக்கள் மரணம் அடைந்தனர். இதனால் நாம் இப்போதே காடுகளை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நாம் விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இந்த போராட்டங்களை யாரும் செவி மடுப்பதில்லை.
டிரான்ஸ்போர்ட் மாபியா, டிம்பர் மாபியா, மணல் மாபியா, கடத்தல் குழுக்கள் என்று பலர் இந்த பிரச்னைக்கு பின் இருக்கிறார்கள். 2009லேயே நாம் காட்டு வாழ் உயிரினங்கள் குறித்து பேசி இருக்கிறோம். ஆனால் இப்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக மீறி வருகிறோம்.
இரவில் அவசரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு மாநிலங்களும் 8 பேருந்துகளை இந்த காடு வழியாக இயக்கி வருகிறது. ஆனாலும் விதிகளை மீறி பல வாகனங்கள் இரவு நேரத்தில் இங்கு இயக்கப்படுகிறது. நாம் ஏன் இந்த விதியை மீறுகிறோம். கேரள மக்கள் ஒழுங்காக இதை பின்பற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
நாம் நம்முடைய இயற்கை அழிந்துபோகும் தருவாயில் இருக்கிறோம். நம்முடைய வானிலை மோசமாகி வருகிறது, வறுமையை, பஞ்சத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. நாம் இதற்காக போராடியது பலன் அளிக்கவில்லை. கேரள மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். அங்கு வெள்ளம் வந்த போதே அவர்கள் இதை உணர்ந்திருக்க வேண்டும்.
அரசியல் விளையாட்டில் தற்போது சுற்றுசூழல் பாதிக்கிறது. உலகம் முழுக்க சுற்றுசூழலை பாதுகாக்க மக்கள்போராடுகிறார்கள். விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். பலர் தற்கொலை செய்கிறார்கள். ஆகவே இதில் இன்னும் அரசியல் செய்யாமல் இந்த சாலை போக்குவரத்தை கேரளா மக்கள் உடனடியாக முறைப்படுத்த வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.