அனிதாவுக்கு நீதி கேட்டு நெல்லையில் குழந்தைகளை சடலம்போல படுக்க வைத்து பெண்கள் போராட்டம்!
நெல்லை: அனிதா சாவுக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் நெல்லையில் ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர், சிறுமிகளையும் போலீசார் கைது செய்தனர். இநத் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தியது.
பாளையங்கோட்டையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பெண்களால் நடத்தப்பட்டது. சாலையில் பிணம் போல குழந்தைககளை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
"நாங்கள் தமிழ் ஜாதியடா.. மக்களை பிரித்து வைத்த நீங்கள் ஆரியர்கள்" என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளும் கைது செய்யப்பட்டனர்.
வேறு ஒரு மாணவியும் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதற்காக சொந்த குழந்தைகளை இப்படி சாலையில் சடலம் போல படுக்க வைத்து போராட்டம் நடத்த முன்வந்ததாக அந்த பெண்கள் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
கைதான சிறுமி பேட்டியளிக்கையில், "அந்த அக்கா என்ன பாவம் செய்தார். நல்லா படிச்சு மார்க் எடுத்தது தப்பா. அவரது சாவுக்கு நியாயம் வேண்டும்." என்று தெரிவித்தது பரிதாபம் வரவழைப்பதாக இருந்தது.