தேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை!
லோக் சபா தேர்தலை வரவேற்க தயாராகிக் கொண்டு இருக்கிறது மயிலாடுதுறை லோக் சபா தொகுதி.
Recommended Video
மயிலாடுதுறை: லோக் சபா தேர்தலை வரவேற்க தயாராகிக் கொண்டு இருக்கிறது மயிலாடுதுறை லோக் சபா தொகுதி. தமிழகத்தில் மயிலாடுதுறை எப்போதுமே மிக முக்கியமான லோக் சபா தொகுதியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மிக வேகமாக புதுமைகளை வரவேற்றுக்கொண்ட ஊர்தான் மயிலாடுதுறை. மாயவரம், மயிலை என்று பல பெயர்களால் இந்த ஊர் அழைக்கப்பட்டு வருகிறது. மயில் ஆடும் துறை என்று இந்த ஊரின் பெயர் எவ்வளவு அழகானதோ அதேபோல்தான் இந்த ஊரும் அழகானது.
2000க்கு பின் மயிலாடுதுறை அடைந்த மாற்றமும் வளர்ச்சியும் மிக பெரியது. முக்கியமாக மயிலாடுதுறை ரயில் நிலையம் ரயில் முனையமாக மாறியபின் இந்த தொகுதி மிக வேகமாக வளர்ந்தது.
எப்போதும் முக்கியம்
மயிலாடுதுறை மக்கள் தங்கள் லோக் சபா தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் எப்போதும் வித்தியாசமானவர்கள். ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து லோக் சபாவிற்கு தேர்வாகிவிட்டால் போது, அவர் கண்டிப்பாக இந்திய அரசியலில் புகழ்பெறுவார் என்பது வரலாறு. மணிசங்கர் ஐயர் முதல் ஓ.எஸ்.மணியன் வரை இதற்கு சான்று.
கணிப்பு கஷ்டம்
ஒரு மாவட்டமாக மாறும் தகுதி இருந்தும் கூட இன்னும் மயிலாடுதுறை நாகை மாவட்டத்துக்குள்தான் வருகிறது.மயிலாடுதுறை மக்கள் எந்த தேர்தலில், எந்த கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து அனுப்புவார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்த ரகசியம். நிலவில் நீர் இருப்பதை கூட சொல்லிவிடலாம், இந்த ஊர் மக்களின் மனதில் இருப்பதை சொல்லிவிட முடியாது.
பல கட்சிகள்
பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்களை மயிலாடுதுறை லோக்சபாவுக்கு அனுப்பியுள்ளது. ஆனாலும் காங்கிரஸ்தான் அதிக முறை இங்கு வென்றுள்ளது. காங்கிரஸ தவிர்த்து, திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், என்று தமிழ்கத்தின் முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் எல்லோரும் இந்த தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளனர். இந்த தொகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று கலவையாக பல மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த லோக் சபா தேர்தல்
மயிலாடுதுறை தொகுதியில் கடந்த லோக் சபா தேர்தல் கணக்குப்படி 13,50,318 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 679,940 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 670,378 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
மாயூரம் தொகுதி
1984 வரை மாயூரம் என்று இந்தத் தொகுதியின் பெயர் விளங்கியது. 1984 தேர்தலுக்குப் பிறகு மயிலாடுதுறையாக மலர்ந்தது. இங்கு நடந்துள்ள 16 லோக் சபா தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. 2 முறை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறை எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது.
அதிமுக ஆர்.கே பாரதி மோகன்
முக்கியமாக மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யாக, அதிமுகவை சேர்ந்த ஆர்.கே பாரதி மோகன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 51 வயதாகிறது. இவர் ஏற்கனவே மயிலாடுதுறைக்குள் வரும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக அதிமுக சார்பாக 2006-2011ல் இருந்துள்ளார்.
எப்படி இவர்
திருவிடைமருதூரை பூர்வீகமாக கொண்ட இவர் டிப்ளமோ படித்துள்ளார். இதே மயிலாடுதுறையில் சென்ற 2009 லோக் சபா தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஓ எஸ் மணியன் எம்.பியாக தேர்வானர். கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பார்வை பட்டு, கெத்தாக மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்றினார்.
பெரிய வெற்றி
கடந்த 2014 லோக் சபா தேர்தலில் ஆர்.கே பாரதி மோகன் 277,050 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் மொத்தம் 513,729 வாக்குகள் பெற்றார். இவர் எதிர்த்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி வெறும் 236,679 வாக்குகள் பெற்றார். அதிமுக பெற்ற இமாலய வெற்றிகளில் மயிலாடுதுறை வெற்றியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார்தான்
அதிமுக, பாஜகவிற்கு மயிலாடுதுறை எப்போதுமே சவாலான தொகுதிதான். ஆனால் அதையும் மீறி அதிமுகவை இரண்டாவது முறையாக மயிலாடுதுறையில் வெற்றிபெற வைக்க ஆர்.கே பாரதி மோகன் மிக முக்கிய காரணம் ஆவார்.ஆனால் நாடாளுமன்றத்தில் எம்.பியாக இவரது செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.அதிமுக எம்.பிக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் செயல்பாடு சுமார்தான்.
என்ன செய்தார்
லோக் சபாவில் இவர் மொத்தம் 50 விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். சராசரியை விட இது அதிகம்.ஆனால் இவர் மிகவும் குறைவாகவே கேள்விகளை எழுப்பி உள்ளார். 293 கேள்விகளை மட்டுமே இவர் எழுப்பி உள்ளார். அதிமுக எம்.பிக்கள் சார்பாக சராசரியாக எழுப்பப்பட்ட கேள்விகள் 417, அதை விட இவர் கேட்டது குறைவான கேள்விகளே ஆகும். இவர் தனி நபர் மசோதா எதையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.
செலவு என்ன
அதேசமயம் இவர் நல்ல அட்டென்டென்ஸ் வைத்துள்ளார் என்றும் கூறலாம். மொத்தம் 83% வருகை பதிவேடு இவர் கொண்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக சராசரியாக எம்.பிக்கள் 78% வருகை பதிவேடு வைத்துள்ளனர்.இவர் தனக்கு வழங்கப்பட்ட 25 கோடி ரூபாய் எம்.பி நிதியில் 16 கோடியை செலவு செய்துள்ளார். மயிலாடுதுறை சாலை, மத்திய அரசு அலுவலக புனரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இதை செலவு செய்துள்ளார். 9 கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யப்படவில்லை.
2019 எதிர்பார்ப்பு
இந்த முறை 2019 தேர்தலில் மயிலாடுதுறையில் யார் வெற்றிபெறுவார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மீண்டும் இங்கு கால் பாதிக்க காத்திருக்கிறது.காங்கிரஸ் மீண்டும் தனது கோட்டையில் கொடி நாட்ட திட்டமிட்டுள்ளது. மாறாக திமுக மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. எல்லாவற்றையும் விட பாஜக தனது கணக்கை இங்கிருந்து தொடங்க திட்டமிட்டு வருகிறது.. மயிலாடும்... துறை வரும் 2019 தேர்தலில் யாரை எல்லாம் ஆட்டுவிக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!