எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பு... 25 இலங்கை மீனவர்கள் கைது... 4 படகுகள் பறிமுதல்
நாகை : நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படை விசாரணை நடத்தி வருகிறது.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், படகுகளை சேதப்படுத்தி கடுமையாக தாக்கி விரட்டி அடிப்பதும் நடந்து வருவது தொடர் கதையாகி உள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 51 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதனை கண்ட இந்திய கடலோர படையினர் சந்தேகத்தின் பேரில் அப்பகுதிக்கு சென்றனர். இதனால் பதற்றமடைந்த மீனவர்கள் படகுகளை வேகமாக செலுத்த தொடங்கினர். இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் பிடிப்பட்டவர்கள், இலங்கை மீனவர்கள் என்றும் எல்லை தாண்டி வந்து நாகை கடற்பகுதியில் மீன்பிடித்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, படகுகளில் இருந்த 25 இலங்கை மீனவர்களையும் கைது செய்த இந்திய கடலோர படையினர், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர். காரைக்காலுக்கு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து, கடற்படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.