பூம்புகாரில் ஒரே நாளில் 50 காகங்கள் 3 நாய்கள் உயிரிழப்பு... காரணம் புரியாமல் மக்கள் தவிப்பு
நாகை: நாகை மாவட்டம் காவேரிபூம்பட்டணம் கிராமத்தில் 50 காகங்கள், 3 நாய்கள் நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறைக்கும், கால்நடைத்துறைக்கும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் அளித்த தகவலை அடுத்து, உயிரிழந்த காகங்களில் உடல்கள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில், இந்த உயிரிழப்புகள் காவேரிபூம்பட்டணம் கிராம மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் புலி, பூனைகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில் காகங்களுக்கும் கொரோனா தொற்று இருக்கக்கூடுமோ என்ற கற்பனை எழுந்துள்ளது.. மேலும், வவ்வால்களின் தொண்டையில் கொரோனா இருப்பதாக அண்மையில் சோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில் காகங்களும், நாய்களும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காகங்களின் உடல்களை சோதனை செய்த பின்னரே உயிரிழந்ததற்கான காரணம் பற்றி கூற முடியும் என நாகை மாவட்ட கால்நடைத்துறை உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனிடையே குறிப்பிட்ட 3 நாய்களுக்கும், காகங்களுக்கும் சமூக விரோதிகள் யாரேனும் விஷம் கலந்த உணவை வைத்தார்களா என்பது பற்றியும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ரமலான் மாதம் பிறந்தது... லாக்டவுனை தளர்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கொரோனாவால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்க கூடுமோ என மக்கள் கற்பனை செய்ய வேண்டாம் என்றும், சோதனைக்கு பின்னர் உரிய முறையில் காரணம் கண்டறியப்படும் என்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.