மண்டைக்கேறிய ஆத்திரம்.. பீரோவை தள்ளிவிட்ட தகப்பன்.. 3 வயது மகள் பலி
பீரோ கீழே விழுந்ததில் 3 வயது குழந்தை பலியானது.
வேதாரண்யம்: ஆத்திரத்திற்கு ஒரு அளவு வேணாமா?
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதி அந்தகத்துறை. இங்கு வசித்து வந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். அவள் பெயர் புவனேஸ்வரி.
ரமேஷூக்கு நீண்ட நாளாகவே குடிபழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறும், சண்டையுமாகவே இருந்திருக்கிறது.
சிரமப்பட்ட மனைவி
குடிக்க பணம் தராவிட்டால் வீட்டையே இரண்டாக்கி சண்டை போட்டுவிட்டு, எப்படியாவது பணத்தை வாங்கி கொண்டு போய் விடுவார் ரமேஷ். சரக்கடித்துவிட்டுதான் வீடே திரும்புவார். இதனால் குழந்தையை வைத்து கொண்டு ரமேஷ் மனைவி மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
ஆத்திரம்
இந்நிலையில் நேற்றும் தண்ணி அடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு ஆரம்பித்தார் ரமேஷ். ஆனால் மனைவி தன்னிடம் சுத்தமா பணமே இல்லை என்று சொன்னார். ஆனாலும் ரமேஷ் விடவில்லை.
முற்றிய சண்டை
வழக்கம்போல் தகராறு ஆரம்பித்தது. இவர்கள் சண்டைக்கு நடுவே குழந்தை அங்கே தனியாக விளையாடி கொண்டிருந்தது. சண்டை முற்றிய ரமேஷ், ஆத்திரம் தலைக்கேறி பக்கத்திலிருந்த பீரோவை ஒரே தள்ளாக தள்ளிவிட்டார்.
குழந்தை பலி
இந்த பீரோ விளையாடி கொண்டிருந்த குழந்தை புவனேஸ்வரி மீது விழுந்தது. இதில் பீரோ பாரம் தாங்காமல் குழந்தை அங்கேயே உயிரிழந்தாள். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.