நாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா, வானகிரி கிராமத்தில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு காளியம்மன் கோயிலும் உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அந்த திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை அங்கு வந்த குழந்தைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பின்னர் பூம்புகார் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலுதவிக்குப் பிறகு, சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குழந்தைகள் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதுபோல் 70 குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து ஐஸ்கிரீம் மாதிரியை பெற்று சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.