வெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி
நாகை: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி 15 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் 30வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.தொடர்ந்து விழிப்புணர்வுப் பேருந்தை பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்த ஓ.எஸ்.மணியன், பேருந்தினுள் அமைக்கப் பட்டிருந்த புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் நாகப்பட்டினத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து 15 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.