பள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்
பள்ளி வகுப்பறையில் நடுராத்திரி நுழைந்து குடித்து கும்மாளம் போட்டுள்ளனர் மர்மநபர்கள்.
நாகை: பள்ளி அறைக்குள் நுழைந்து.. கோரை பாயை விரித்து.. குடித்து கும்மாளம் போட்டு சென்றிருக்கிறார்கள் மர்மநபர்கள்!!
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வடக்குவெளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை சாயங்காலம் பள்ளியை வழக்கம்போல் தலைமை ஆசிரியை ஜெயந்தி பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
சனி, ஞாயிறு லீவு முடிந்து திங்கட்கிழமை வந்து கதவை திறக்க வந்திருக்கிறார். அப்போது பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பூட்டுகள் உடைப்பு
உடனே உள்ளே சென்று பார்த்தால், மர்ம நபர்கள் நள்ளிரவில் ஸ்கூலுக்கு உள்ளேயே வந்து போயிருக்கிறார்கள் என தெரியவந்தது. ஒவ்வொரு கிளாஸ் ரூமூக்கு வெளியே பூட்டப்பட்டிருந்த பூட்டுக்களை உடைத்தெறிந்துள்ளனர். அங்கிருந்த டீச்சர்களின் சேர், டேபிள்களையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள்.
மதுபாட்டில்கள்
பிள்ளைகள் உட்கார வைத்திருந்த கோரை பாயை எடுத்து விரித்து வைத்து அதில் உட்கார்ந்து தண்ணி அடித்திருக்கிறார்கள். குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை வீசி விட்டு சென்றிருக்கிறார்கள்.
பீரோ உடைப்பு
போனவர்கள் சும்மா போகவில்லை, தலைமை ஆசிரியை ரூமில் இருந்த பீரோவில் மாணவர்களின் மாற்று சான்றிதழ் உள்பட முக்கிய ஆவணங்களை அழித்துவிட்டும் சென்றுள்ளனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் போரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் குமுறல்
இந்த ஸ்கூலுக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளதாம். அதனை அகற்ற வேண்டும் என்று நிறைய முறை பொதுமக்கள் புகார் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
விசாரணை தீவிரம்
கிளாஸ் ரூமையே பாராக மாற்றிவிட்டு சென்ற அந்த சமூகவிரோதிகள் யார் என தெரியவில்லை. எதற்காக முக்கியமான ஆவணங்களை எடுத்து அழித்துவிட்டு போனார்கள் என்றும் புரியவில்லை என்பதால் போலீசார் மும்முரமான விசாரணையில் இறங்கி உள்ளது.