நாகையில் ஓட்டலை அடித்து நொறுக்கி, கொலை வெறி தாக்குதல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்
நாகப்பட்டினம்: நாகையில் மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் ; கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
நாகை செம்மரக் கடை வீதி பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன் என்பவர் தோணித்துறை சாலையில் கடந்த 30 ஆண்டுகளாக ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கடையை மூடும் வேளையில் ஹோட்டலில் சாப்பிட்ட நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிவாஸ் மற்றும் சிலம்பு ஆகியோர் ஆம்லெட் கேட்டுள்ளனர்.
கைகலப்பு
அதனை தொடர்ந்து இடுப்பில் மறைத்து வைத்திருந்த மதுவை எடுத்து கடையிலேயே வைத்து குடித்ததை பார்த்த கடை உரிமையாளர் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
கொலைவெறி தாக்குதல்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று மீண்டும் தனது நண்பர்களை அழைத்து வந்த நிவாஸ் மற்றும் சிலம்பு தலைமையிலான கும்பல் ஹோட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். கடை கண்ணாடி, மேசை, சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடு மீது தாக்குதல்
தொடர்ந்து கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகிய இருவர் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் கல்லாவில் இருந்த 12500 ரூபாய் பணத்தையும் எடுத்து அங்கிருந்து தப்பியோடினர். தொடர்ந்து கடை உரிமையாளரின் வீட்டிற்கு சென்ற அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
மாஸ்டரும் படுகாயம்
அதனை தொடர்ந்து தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுகாயமடைந்த கடை உரிமையாளர் ஜாஹிர் உசேன் மற்றும் மாஸ்டர் அப்துல்லா கான் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகையில் மது அருந்த அனுமதிக்காத ஹோட்டல் உரிமையாளரை தாக்கி ஹோட்டலை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.