அடிமை சேவகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி.. வைகோ பாய்ச்சல்
நாகை: தமிழக உரிமைகளை மத்திய அரசின் காலடியில் போட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிமை சேவகம் செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்காமல், திட்டமிட்டு பெட்ரோல் மண்டலமாக மாற்றி விட்டனர் என்று தெரிவித்தார்.
இதற்காக, கடந்த 2017 ஆம் ஆண்டு 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் மத்திய அரசுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாக கூறினார். கஜா புயல் தாக்கிய போது, தமிழகத்தை எட்டிப்பார்க்காத மோடி, வாழ்வாதாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னாரா என கேள்வி எழுப்பினார்.
இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள் மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாக கூறிய வைகோ, மத உணர்வுகளை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாக குறிப்பிட்டார். காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு தமிழகத்துக்குச் செய்யும் வஞ்சகத்துக்கெல்லாம் துணை போகின்ற எடப்பாடி பழனிசாமியின், எடுபிடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார்.
வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவுன்சிலராக கூட தகுதி இல்லாதவர் ஸ்டாலின் என கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்கப் போவதாக கூறி வருகிறார் என்றார்.