கஜா புயல் நிவாரணம்.. குவிகிறது உதவிகள்.. தீயாய் வேலை செய்யும் சமூக வலைதளங்கள்
டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது.
Recommended Video
நாகை: தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் நிவாரண உதவிகள் புயல் பாதித்த மக்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது!
கஜா தந்துவிட்டு போன இழப்பினை சரி செய்ய முடியாமல் தமிழகம் தவித்து வருகிறது. அரசு ஒரு பக்கம், மக்கள் ஒரு பக்கம் என மாறி மாறி உதவிகளை செய்து மாவட்ட மக்களை கை தூக்கி விட்டு வருகிறார்கள்.
டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒன்று என்றால் மற்ற மாவட்ட மக்கள் சும்மா இருந்து விடுவார்களா என்ன? சின்ன சின்ன குழந்தைகள்கூட உண்டியலை வசூல் செய்து பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு!
மனசு கனக்கிறது
பள்ளி மாணவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை நிவாரண பொருட்களை திரட்டி கொண்டு போய் தருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மீட்பு பணிகளில் இறங்கி உள்ளனர். அப்போது, ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சொல்லும்போது, "சேதமடைந்ததை கண்ணால் பார்க்கவே முடியவில்லை.. மனசு கனக்கிறது" என்று சொல்கிறார்கள்.
நிவாரண பொருட்கள்
இதை தவிர நல்லுள்ளம் படைத்தவர்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறார்கள். ஆரணியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக அரிசி, சர்க்கரை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி, பருப்பு வகைகள், மருந்துகள், குடிநீர் பாட்டில்கள் பொது மக்களே மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி விட்டு வந்தனர்.
மீட்பு உதவிகள்
அவிநாசியில் இருந்தும் அத்தியாவசிய பொருட்களை ரூ.2 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதுபோக, தனிநபர்கள், சற்று வசதி படைத்தவர்கள், காய்கறிகள், உள்ளாடைகள், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள் என எல்லாவற்றையும் கொண்டு போய் நேரிலே கொடுத்துவிட்டு, அவர்களுக்கு முடிந்த மீட்பு உதவியையும் செய்து விட்டு வருகிறார்கள்.
வாட்ஸ்அப்
பட்டுக்கோட்டை பகுதிக்கு மட்டும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்கள், வாட்ஸ் அப் மூலம் நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். வாட்ஸ்அப் மூலமும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு பக்கம் சேர்ந்து வருகிறது.
நெகிழ்ச்சி தருகிறது
பெரிய அளவிலான உதவிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கொண்டு வர உடனடி தேவையாக இருக்கிறது. என்றாலும், இப்படி தமிழகத்தின் நாலாபுறமும் டெல்டா மக்களுக்கு உதவிகள் சேர்ந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.