529 சமையலறைகள்.. நாகை மக்களுக்கு 3 வேளை சாப்பாடு ரெடி ஆகிறது.. அமைச்சர் வேலுமணி தகவல்
நாகை மக்களுக்கு 3 வேளையும் சாப்பாடு தயாராகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.
நாகை: 529 கிச்சன்களில் நாகை மக்களுக்கு 3 வேளை சாப்பாடு ரெடி ஆகிக்கிட்டு இருக்கு என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் கடும் பேரழிவை சந்தித்தது நாகை மாவட்டம். மற்ற மாவட்டங்களில் வீடு, தோப்புகள் நாசமானது என்றால் இந்த மாவட்டத்தில் படகுகளும் சேர்ந்தே சேதமாகி விட்டன. இதனால் வாழ்வாதாரம் மட்டுமில்லாமல்... அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.
மரங்கள் விழுந்து இத்தனை நாளாச்சு, ஒருத்தரும் வந்து எடுத்து போடலை என்று சொல்லிக் கொண்டே கிராம மக்களே அவைகளை வெட்டி அப்புறப்படுத்தியும் வருகிறார்கள்.
26 இடங்களில் மறியல்
குடிநீர், உணவும் கிடைக்காததால், பல கிராமங்களில் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் நாகை மாவட்டத்தில் 26 இடங்களில் மக்கள் கொதித்து போய் மறியலில் இறங்கினர்.
விரைந்த அதிகாரிகள்
இப்படி ஒரு மறியலை அந்த மாவட்டம் இதற்கு முன்பு நடத்தியது இல்லை. போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து ஓடி வந்தார்கள். எவ்வளவோ சமரசம் பேசியும் மக்கள் கோபம் தணியவே இல்லை.
அமைச்சர் பேட்டி
இந்த நிலையில்தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாகை மக்களுக்கு சாப்பாடு தயாராகி கொண்டே இருப்பதாக கூறினார்.
14 குழுக்கள்
நாகையில் 3.55 லட்சம் உணவுப்பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது கூட 529 சமையலறைகளில் இருந்து 3 வேளை மக்களுக்கு உணவு தயாராகிக் கொண்டே இருக்கிறது என்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய 14 குழுக்களாக பிரிந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.