ஸ்டாலின் ஒன்னா நம்பர் குடிகாரர்.. வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அந்த அமைச்சர்
Recommended Video
நாகை: திமுக தலைவர் ஸ்டாலின் குடிகாரர் போல பேசுகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு அதிமுக சார்பில், பிறந்தநாள் விழா, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கூட்டத்தில் மயிலாடுதுறை எம்எல்ஏ உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
நிதி நெருக்கடி
தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளது. மத்தியில் ஆண்டு வரும் அரசோ கொடுக்க வேண்டிய நிதியை தராமல் இருக்கிறது.
மக்கள் நலத்திட்டங்கள்
அந்த சூழ்நிலையிலும், ஜெயலலிதா வழியில், அவர் அறிவித்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். அவர் திறம்பட பணியாற்றி வருகிறார்.
பழமொழி சொன்ன அமைச்சர்
இன்னும் சொல்ல வேண்டும் என்றால்... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ற மாதிரி ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
ஆட்சிக்கு ஆபத்து
11 எம்எல்ஏக்கள் வழக்கிலும், 18 எம்எல்ஏக்கள் வழக்கிலும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்து ஆட்சி கவிழ்ந்து போய்விடும் என்று ஸ்டாலின் எதிர்பார்த்தார். ஆனால், எடப்பாடியின் அற்புதமான ஆட்சிக்கு, அவரது அதிர்ஷ்டம் கை கொடுத்தது.
தகர்ந்து போன கனவு
அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த திமுகவே தோற்றுப் போனது. தற்போது, முதல்வர் கனவு தகர்ந்து போனதால் ஸ்டாலின் புலம்பிவருகிறார்.
குடிகாரர் பேச்சு
கருணாநிதி தமது வாழ்நாளின் கடைசிவரை தவறுதலாக பேசியதாக வரலாறு இல்லை. ஆனால், ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரிய வில்லை. டாஸ்மாக் கடைக்கு போய்விட்டு வந்த குடிகாரர் போல பேசுகிறார்.
சந்தேகம் வருகிறது
இதையெல்லாம் பார்க்கும்போது, இவரா கருணாநிதியின் பிள்ளை என்ற சந்தேகம் வருகிறது. ஸ்டாலின் சொல்வது எல்லாம் தவறாகவும், பேசுவது எல்லாம் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.
புதிய பேருந்து நிலையம்
டிடிவி தினகரனின் கட்சி இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். மயிலாடுதுறையில் விரைவில் அரசு செலவின்றி, விளம்பரதாரர்கள் செலவில், ரூ.38.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்க இருக்கிறது என்று தெரிவித்தார்.