மத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு
நாகை: மாநிலங்கள் மீது புதிய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் செயல், ஜனநாயகத்திற்கு விரோதமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என போராடி வருகிறோம். இந்த சூழலில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த நினைப்பது, கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
கஸ்தூரிரங்கனின் அறிக்கை, எஸ்சி, எஸ்டி, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. மனுதர்மத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு நினைப்பது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது என சாடினார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை, இந்தி மற்றும் ஆங்கில மொழியில் உள்ளது. இதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் தமிழக அரசு கேட்க வேண்டும்.
இதற்காக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்திற்கும், நீட் நுழைவு தேர்விற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. நீட் நுழைவு தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் இடம் பெறுவது இல்லை. பிறகு எதற்காக நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
காவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
கல்வி சார்ந்த விவகாரங்களில் கொள்கையை திணிக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை. மேலும் பாடப்புத்தகங்களில் மதத்தை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை மாநில அரசு பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என்பதை தமிழக அரசு தெளிவாக கூற வேண்டும். ஆனால் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் விட்டு கொடுப்பதில் தான் எடப்பாடி அரசு முந்தி கொண்டு நிற்கிறது.
இதற்கு உதாரணங்களாக ஹைட்ரோ கார்பன் திட்டம், பசுமை வழிச்சாலைத் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைப்பு என அடுக்கி கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன என குற்றம் சுமத்தினார்.
தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் முத்தரசன் ஆவேசமாக கூறினார்.