நாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நாகை: நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்காக தமிழக அரசு சார்பில் 20 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
மறைந்த ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு முதல் நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்காக தமிழக அரசு சார்பில் விலையில்லாமல் சந்தனக் கட்டைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் அவர் மறைந்த நிலையிலும் அவரது வழிமுறையை பின்பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகளை வழங்கி வருகிறார்.
மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் சீனாவுக்கு தொடர்பு? ஷாக் தகவல்
நாகை மாவட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா தமிழக அளவில் மிகவும் பிரசித்த பெற்ற புனித தலமாகும். டெல்டா மாவட்ட மக்களின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்காவை கூறலாம். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மாற்று மதத்தினரும் நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்திற்கு வந்து பிரார்தித்து செல்வது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான ஜமாத்துல் ஆகிரில் சந்தனக் கூடு விழா நடைபெறும்.
ஜெயலலிதா திட்டம்
இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அங்கு குவிவார்கள். வானவேடிக்கையுடன் நடைபெறும் இந்த விழா, மத வழிபாட்டு முறைக்கு அப்பாற்பட்டு நல்லிணக்க கலாச்சார நிகழ்வாக ஆயிரம் ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. இதனிடையே நாகூர் தர்காவுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் வழங்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.
அரசாணை வெளியீடு
இதனிடையே ஜெயலலிதா மறைவுக்கும் பிறகும் சந்தனைக் கட்டைகள் வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்பற்றி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு சந்தனக் கூடு விழா வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், விலையில்லாத 20 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் இன்று வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் உடனிருந்தார்.
அரசுக்கு நன்றி
தமிழக அரசு சந்தனக் கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டதை அடுத்து, நாகூர் தர்ஹா ஆதினங்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அரசாணை வெளியிடப்பட்டதால் வனத்துறை சார்பில் விரைவில் நாகூர் தர்கா நிர்வாக கமிட்டியிடம் சந்தனக் கட்டைகள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.