பலத்த போலீஸ் பாதுகாப்புடன், புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட முதல்வர்!
Recommended Video
நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே இன்று காலை முதல் மதியம் வரை ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.
கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், கடந்த 20ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடும் நோக்கத்தில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்றார் முதல்வர்.
ஆனால், கடுமையான மழை பெய்வதன் காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் சென்னை திரும்பினார். முதல்வர் அங்கேயே தங்கியிருந்து அடுத்த நாளாவது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
மற்றொரு நாளில் நான் விடுபட்ட மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடுவேன் என்று முதல்வர் உறுதியளித்தார். அதன்படி மீண்டும் இன்று விடுபட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார் முதல்வர்.
இதையொட்டி நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை புறப்பட்டு வந்தார். காலை 8.30 மணியளவில், நாகை நிவாரண முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வழங்கினார் முதல்வர். படுத்து உறங்க பாய், தென்னம்பிள்ளைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி அமைச்சர் வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதன்பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்திய முதல்வர், நிவாரண முகாம்களில் மக்களோடு அமர்ந்து அவர்களுக்கு வழங்கும் உணவையே உண்டார்.
இதன்பிறகு மதியம் 2.30 மணியளவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் முதல்வர். அவர் கூறியதாவது:
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்- முதலமைச்சர் பழனிசாமி. சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளன. நாகையில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 7886 ஹெக்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப உதவியோடு, மா, பலா, முந்திரி மரங்களை மீண்டும் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகை மாவட்டத்தில், 415 முகாம்களில் 2 லட்சத்து 85 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மனசாட்சிப்படி, மனிதநேயப்படி தமிழகம் கேட்ட நிவாரண நிதியை வழங்கும் என்று நம்புகிறோம். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்தபோதிலும், எதிர்பாராத சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குள் நிவாரண பொருட்கள் முழுமையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதன்பிறகு திருவாரூர் மாவட்ட பகுதிகளில் புயல் நிவாரண பணிகளை மேற்கொண்டார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அதிகம் பேர் சூழ்ந்துவிடாத அளவுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.