புயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை
நாகை: ஃபனி புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபனி புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்புயல் வரும் 30-ம் தேதி மாலை வட தமிழகம்- தெற்கு ஆந்திரம் இடையே கடற்கரை பகுதியை நெருங்கும். அப்போது சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கொள்முதல் நிலையங்களில் கிடக்கும் நெல் மூட்டைகளை, பாதுகாக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, புயலில் இருந்து சேதமாகாமல் காப்பாற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புயலில் இருந்து நெல் மூட்டைகளை பாதுகாக்க, உடனடியாக கொள்முதல் நிலையங்களில் இருந்து அவற்றை சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பேசிய அரசு அதிகாரி ஒருவர், தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் பெரும் பகுதி, சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரப்படுத்தபட்டுள்ளதாக குறிப்பிட்டார். மீதமுள்ள மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உளவுத்துறை எச்சரிக்கை... தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு... தீவிர கண்காணிப்பு