11 நாட்களுக்குப் பிறகு.. மின்சாரத்தை பார்த்த வேதாரண்யம்!
11 நாட்கள் கழித்து வேதாரண்யத்தில் மின்இணைப்பு தரப்பட்டது.
நாகை: ஒருவழியாக 11 நாட்களுக்கு பிறகு வேதாரண்யத்துக்கு கரண்ட் வந்துவிட்டது!!
கஜா புயலால் பாதிக்கப்பட்டதில் முக்கியமானது நாகை மாவட்டம்தான். இந்த மாவட்டத்தில் இருந்த எல்லா கரண்ட் கம்பங்களுமே முறிந்தன. மின் வயர்கள் எல்லாம் அறுந்து தாறுமாறாக தொங்கின. புயல் அடித்த அந்த நாளே இருளில் மூழ்கி விட்டது இந்த மாவட்டம். புயல் கடந்த மறுநாள் நாகையில் மின்சாரத்தை கொண்டு வரும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பணியில் தனிநபர்கள் கூட ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள். ரிடையர் ஆன 60 வயது மின்ஊழியர் ஒருவர் கூட கஜா பாதித்த மறுநாளே வந்து மின்வயர்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். அதேபோல, மின்துறை அமைச்சர் தங்கமணியும், மின் இணைப்பு மாவட்டங்களுக்கு வழங்குவது சம்பந்தமாக டெல்டா மாவட்டங்களிலேயே முகாமிட்டார்.
முகத்தில் சந்தோஷம்
தற்போது வேதாரண்யத்துக்கு கரண்ட் வந்துள்ளது. 11-நாள் கழித்து கரண்ட் வந்துள்ளதால் வேதாரண்யம் மக்கள் துள்ளி குதித்தனர். முகத்தில் அவர்களுக்கு சந்தோஷம் பீறிட்டது. இதனிடையே, மாவட்டங்களில் மின் இணைப்பு குறித்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஓரிரு நாட்கள்
"11 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்த வேதாரண்யம் நகரில், 75 சதவீத வீடுகளுக்கு நேற்றே மின் இணைப்பு தரப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு இன்னும் 2 நாளில் கிடைத்து விடும். அதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. முத்துப்பேட்டைக்கும் கரண்ட் நாளை, அல்லது நாளை மறுநாள் வந்துவிடும். அந்த வேலையும் துரிதமாக போய் கொண்டிருக்கிறது" என்றார்.
திருத்துறைப்பூண்டி
மற்ற பகுதிகளில் மின்இணைப்பு பற்றி அமைச்சர் சொல்லும்போது, "திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதம் மின் இணைப்பு வந்துவிட்டது. மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
கலந்து ஆலோசனை
இப்படி பல வீடுகளில் கரண்ட் பாதிக்கப்பட்டிருப்பதால், வரும் 30-ந்தேதி வரைக்கும் பில் கட்ட வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. அந்த காலக்கெடுவை இன்னும் நீட்டிப்பது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசப்படும்" என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.