மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை
நாகை: நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
நாகை மாவட்டத்தில் நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் விவசாய நிலங்களை உழுது பயிர் செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு உழவுப்பணிகளை துவக்க உள்ளனர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து இருந்தது. அன்று 8.30 முதல் 10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.