ஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிசேர்ந்த கடலோர மாவட்டங்கள்...600 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம்
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் தொடங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 600 கி.மீ. தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு இயற்கை விவசாயி நம்மாழ் வாரால் தொடங்கப்பட்ட பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மனிதச் சங்கிலி போராட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு கைகளில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மரக்காணத்தில் நடைபெறும் போராட்டத்தில் வைகோ, பொன்முடி, வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்; லட்சக்கணக்கான லிட்டர் நீரை ரசாயனம் கலந்து நிலத்துக்குள் செலுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.