இந்த கட்சியால்தான் என் மகன் உசுருக்கே ஆபத்து வந்தது.. காடுவெட்டி குரு அம்மா பகீர்
பாமக நிறுவனர் மீது காடுவெட்டி குரு அம்மா பகிரங்க குறை சொல்லி உள்ளார்.
நாகை: கட்சியில் சேர்ந்ததால் தான் என் மகன் உசுருக்குகே ஆபத்து வந்தது, இனி எங்களுக்கும், பாமகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று மறைந்த காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் கூறியுள்ளார்.
மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்தில் என்னதான் பிரச்சனை என்று இதுவரை நமக்கு முழுசா தெரியவில்லை.
மகன், மகள், மனைவி, அம்மா, அக்கா என எல்லோருமே பிரச்சனைகளை தனித்தனியாக மீடியாவில் சொல்லி வருகிறார்கள். சொத்து தகராறு காரணமாக வந்த குடும்ப பிரச்சனை என்பதா, அல்லது உள்கட்சி விவகாரத்தால் வந்த பிரச்சனை என்பதா என தெரியவில்லை.
பாமக நிர்வாகிகள்
காடுவெட்டி குரு அம்மா முன்பு ஒருமுறை, "இந்த கட்சியால்தான் என் மகன் இறந்தான், என் மகனை நடுத்தெருவில் நிறுத்திவிட்டது இந்த கட்சிதான்" என்று பாமக நிர்வாகிகள் முன்னிலையிலேயே பகிரங்கமாக திட்டி வீடியோ வெளியானது.
முதல் செங்கல்
அதேபோல சிலதினங்களுக்கு முன்பு காடுவெட்டி குரு நினைவு மணி மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு, முதல் செங்கல்லை எடுத்து தந்தார். ஆனால் அந்த விழாவில் குருவின் மனைவி லதா தவிர குடும்பத்தினர் யாருமே கலந்து கொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்யாணி அம்மாள்
இந்த நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் குருவின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குருவின் தாயார் கல்யாணி அம்மாள் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாமகவை பகிரங்கமாக சாடி பேசினார். பாமகவுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது.
மிரட்டுகிறார்கள்
"காடுவெட்டியில் குருவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்குமுன், எங்களுக்குள்ள ஒன்றரைக் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டு மணிமண்டபம் கட்ட சொன்னதால், நிறுவனர் ராமதாஸ் அடியாட்கள் மூலம் எங்கள் குடும்பத்தினரை தாக்கி மிரட்டுகின்றனர். பாமகவுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது.
வசூல் செய்யகூடாது
இனிமேல் எங்களுக்கும் பாமகவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் எங்களுக்கு உதவி செய்பவர்களை மிரட்டி, பாமக கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். மேலும், காடுவெட்டி குருவின் பெயரை பாமகவினர் பயன்படுத்தக்கூடாது. குருவின் பெயரைப் பயன்படுத்தி வசூலும் செய்யக் கூடாது" என்றார்.
மகன் கனலரசன்
இதை தொடர்ந்து குருவின் மகன் கனலரசன் பேசும்போது, "எங்கள் குடும்பத்தை அழிக்க நினைக்கும் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை எதிர்த்து நிற்போம். என் படிப்பு முடியும் வரை நான் எதிலும் இறங்க மாட்டேன், அதுவரை என் மாமா வழுவூர் வி.ஜி.கே. மணி அனைத்தையும் பார்த்து கொள்வார்" என்றார்.
பாட்டி, பேரன்
இவ்வாறு பாட்டியும், பேரனும் பாமக தலைமையை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி பேசியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே கனலரசன்தான் போன மாதம், தன் அம்மாவை காணோம் என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும் குழப்பம்
அதில் நிறுவனர் ராமதாஸ்தான் தனக்கு உதவ வேண்டும் என்று ஒரு கோரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால் அடுத்த மாசமே நிறுவனரை தாக்கி பேசியுள்ளது மேலும் மேலும் குழப்பதைத்தான் ஏற்படுத்துவதாக உள்ளது.