வந்தாச்சு கிறிஸ்துமஸ்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி.. குவியும் மக்கள்!
வேளாங்கண்ணி: கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணியில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும், வெளிநாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.
நாளை கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், குழந்தை இயேசு பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் விண்மீன்ஆலயம், பேராலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன. மேலும் விண்மீன் கோயிலினுள் பிரமாண்ட இயேசு கிறஸ்து பிறப்புகுடில் அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணியில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். விண்மீன் கோயிலில் இன்று இரவு 11.30 மணி முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும நாளை வழக்கமான திருப்பணிகள் மற்றும் கூட்டுப் பிராா்த்தனைகள் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணிக்கு லட்சகணக்கானோர் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதேபோல் போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க வேளாங்கண்ணியை சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.