அமைச்சர் ஓ.எஸ். மணியன் மனைவி கலைச்செல்வி காலமானார்... நாகையில் உள்ள சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு
நாகை: தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி காலமானார். அவருக்கு வயது 61.
அமைச்சராக மட்டுமல்லாமல் அதிமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்பவர் ஓ.எஸ். மணியன். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்புலம் என்ற கிராமத்தில் வசித்து வரும் இவர், ஒரு காலத்தில் சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். இப்போதும் கூட தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமல் அமைதி காத்து வரும் அமைச்சர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் இவருடைய மனைவி கலைச்செல்விக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு உடனிருந்து மனைவியை கவனித்து வந்த அவர் நேற்று நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்ததால் ஊருக்கு வந்திருக்கிறார்.
இதனிடையே கலைச்செல்வியின் பல்ஸ் குறைந்து வருவதாக அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் வந்த வேகத்திலேயே மீண்டும் சென்னைக்கு சென்று சேர்ந்தார். மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கலைச்செல்வியின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடலை நாகை மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமமான ஓரடியம்புலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட உள்ளன.
மு.க.ஸ்டாலினை தலைவரே என அழைத்த முதல் குரல்... அன்றே தலைவர் பட்டம் சூட்டிய அன்பில் பொய்யாமொழி..!
மனைவியை இழந்து நிற்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொலைபேசி மூலம் அழைத்து தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.