புயல் பாதித்த மக்களுக்காக.. யாருடனும் இணைந்து பணியாற்ற தயார்.. கமல் அறிவிப்பு
தஞ்சை, நாகை பகுதிகளில் கமல் நேரில் ஆய்வு செய்ய களம் இறங்கி உள்ளார்.
Recommended Video
திருச்சி: புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் டெல்டா மாவட்ட மக்களை சந்திக்க களத்தில் இறங்கி விட்டார். புயல் போய் ஒரு வாரம் ஆக போகுது. இன்னும் யாரையுமே அந்த பக்கம் காணோம் என்று டெல்டாவாசிகள் புலம்பி வந்தனர்.
இவர் நேற்று முன்தினம் கமல் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
விமான நிலையம்
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் ஏராளமான நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்க ஆரம்பித்தார்கள். தற்போது, கமலும் நேரடியாக வந்து புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியை பார்வையிட உள்ளார். அதற்காக சென்னையிலிருந்து இன்று காலை திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.
தஞ்சை செல்கிறார்
விமான நிலையத்தில் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வரவேற்றனர். திருச்சியில் இருந்து முதல்கட்டமாக கமல்ஹாசன் தஞ்சை மாவட்டம் செல்ல உள்ளார். அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்டு அதன்பின்னர் கஜா பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
கூடுதல் இழப்பீடு வேண்டும்
கஜா புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம், முதல்வர் வலியுறுத்த வேண்டும். நிவாரண உதவி போதுமானதாக இல்லை, உயிரிழப்புக்கு குறைந்தது ரூ.20 லட்சம் தர வேண்டும். தென்னைக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
நிவாரண பணிகள்
புயல் நிவாரணத்துக்காக யாருடனும் இணைந்து பணியாற்ற தயார். கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.
நேரடியாக போகிறேன்
இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன். ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க உள்ளோம்.
தஞ்சை செல்கிறேன்
தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். முதல்கட்டமாக தஞ்சை மாவட்டம் செல்ல உள்ளேன். அங்கு நிவாரண பணிகளை பார்வையிட்ட பின்னர் கஜா புயல் பாதித்த மற்ற மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளேன்"
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.