நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி கைது... காவல்துறையினரால் 2.30 மணி நேரம் சிறைவைத்து விடுவிப்பு
நாகை: நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 2.30 மணி நேர சிறைவைப்பிற்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வேதச நாடுகள் நீதி வழங்கக் கோரி திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. மே 17 இயக்கம் அழைப்பை ஏற்று அவர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இரண்டு அடி தூரத்திற்கு ஒருவராக நின்று மனிதநேய ஜனநாயக கட்சியினர் தமிமுன் அன்சாரி தலைமையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி முழக்கம் எழுப்ப இருந்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற போலீஸ் தமிமுன் அன்சாரி உட்பட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து திருத்துறைப் பூண்டியில் உள்ள திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இரவு 8 மணி வரை சிறைவைத்திருந்தது. இதனிடையே அவர்கள் அனைவரும் ரமலான் மாதம் நோன்பு நோற்றிருந்ததால், அவர்கள் நோன்பு திறப்பதற்கு(இஃப்தார்) தேவையான தண்ணீர், பிஸ்கெட், குளிர்பானம் உள்ளிட்டவைகளை போலீஸாரே ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இன்று மே 17-வஞ்சக வலையில் வீழ்த்தி கொல்லப்பட்ட தொப்புள்கொடி உறவுகளுக்கு வீரவணக்கம்- ராமதாஸ்
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தமிமுன் அன்சாரியை காவல்துறை விடுவித்தது. அவர் கைது செய்யப்பட்ட தகவலறிந்து இயக்குநர்கள் களஞ்சியம்,கவுதமன், காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன், மே 17 இயக்கத்தினர் என பல தரப்பினரும் உடனடியாக தமிமுன் அன்சாரியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டனர்.