தோப்புத்துறை பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை... சுஜித்தை மீட்க மனம் உருகி து ஆ
நாகை: மணப்பாறையை அடுத்து நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித்தை பாதுகாப்பாக விரைந்து மீட்க வேண்டும் என, நாகை மாவட்டம் தோப்புத்துறை பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
சிறுவன் சுஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மத மாச்சரியங்களை கடந்து சிறுவன் சுஜித்துக்காக அனைத்து மதத்தினரும் பிரார்த்தனை என்ற ஒற்றை வார்த்தை மூலம் கரம் கோர்த்து கண்ணீர் வடித்து வருகின்றனர்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.. தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. சென்னையிலும் தான்!
உயிரைக் காப்பாற்ற
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டு ஆகச் சிறந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அந்த முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிகின்றன.
கண்ணீர் மல்க
தொலைக்காட்சிகளில் மீட்பு பணிகளை பதைபதைப்புடன் பார்க்கும் தாய்மார்களும், முதியோர்களும் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி, அந்தச் சிறுவன் சுஜித்தை எப்படியாவது மீட்டுவிட மாட்டார்களா என துடிதுடிக்கின்றனர்.
மனம் உருகி து ஆ
சிறுவன் சுஜித் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என நாகை மாவட்டம் தோப்புத்துறையில் இன்று மாலை (அசர்) தொழுகைக்கு பிறகு சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக தலைவருமான தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுஜித்துக்காக மனம் உருகி பிரார்த்தித்தனர்.
இறைவா காப்பாற்று
அந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கண்ணீர்மல்க இறைவனிடம் வேண்டினர். மேலும், உலகமக்களின் பிரார்த்தனையை ஏற்று சுஜித்தை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு குழந்தைகள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.