தாரை, தப்பட்டை முழங்க.. கலர்ஃபுல்லாக இன்று துவங்குகிறது நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்
நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று இரவு தொடங்குகிறது.
நாகை: பிரசித்தி பெற்ற நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று இரவு துவங்க உள்ளது. இதற்காக நாகை மாவட்டமே விழாக்கோலம் பூண்டு சுறுசுறுப்பாகி வருகிறது.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ளது ஆண்டவர் தர்கா. இது உலக பிரசித்தி பெற்றது. தர்காவில் நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் செய்யது அப்துல் காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு, 462ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று இரவு நாகையிலிருந்து நடக்கிறது. இந்த ஊர்வலம் கிளம்பும்போதே தாரை தப்பட்டை என அமர்க்களமாக இருக்கும்.
சாம்பிராணி சட்டி
பிறகு சாம்பிராணி சட்டி ரதம், பல்வேறு மின் அலங்கார தட்டிகள் என சந்தன கூட்டின் முன்பும் பின்பும் அணிவகுத்து பார்க்கவே கலர்ஃபுல்லாக ஜொலிக்கும். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள், சாலைகள் வழியாக சென்று நாகூர் தர்காவை இறுதியாக சென்றடையும். அதாவது சனிக்கிழமை அதிகாரைல சுமார் 4.30 மணி அளவில் ஊர்வலம் நடந்து முடியும்.
சந்தனக் குடம்
பாரம்பர்ய முறைதாரர் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் சந்தனக் குடத்தை நாகூர் ஆண்டவர் சன்னதி அறைக்குக் கொண்டுச் செல்வார்கள். இதையடுத்து நாகூர் ஆண்டவரின் புதின ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
மத வேறுபாடு இல்லை
சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சிகளில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவார்கள். இந்த விழாவுக்கு மத வேறுபாடே கிடையாது. லட்சக்கணக்கானோர் ஊர்வலத்தில் குவிவார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது.
போலீசார்
லட்சக்கணக்கானவர்கள் கூடும் விழா என்பதால் அவர்களின் பாதுகாப்புக்காகவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும் 1200 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.