ஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட கொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி!
15 ஆடுகளை காப்பாற்ற சென்ற மூதாட்டி உயிரிழந்தார்
நாகை: ஆட்டுக் கொட்டகையில் ஏகப்பட்ட கொசுக்கள்.. அவைகளை விரட்டுவதற்காக அஞ்சம்மாள் புகை போட.. அந்த கொட்டகையே தீப்பிடித்து எரிந்தது.. இதில் உயிருக்கு போராடிய ஆடுகளை காப்பாற்ற முயன்று.. 15 ஆடுகளுடன் சேர்ந்து அஞ்சம்மாளும் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அண்டர்காடு வடக்கு பகுதியை சேர்ந்தவர் அஞ்சம்மாள். 78 வயது பாட்டி இவர்.. ஒரு கூரை வீட்டில் வசித்து வந்தார்.. வயிற்று பிழைப்புக்காக 15 ஆடுகளையும் வளர்த்து வந்தார். இதற்கான கொட்டகை ஒன்றினை வீட்டுக்கு பக்கத்திலேயே அமைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டார்.. அப்போது மாலை நேரம் என்பதால் கொசுக்கள் நிறைய கொட்டகைக்குள் மொய்க்க ஆரம்பித்தன.. இதனால் கொசுவை விரட்டுவதற்காக புகை மூட்டம் போட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக புகை மூட்டத்திலிருந்து தீ பரவி கொட்டகை முழுக்க தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது வீடு முழுக்க மளமளவென பரவ ஆரம்பித்தது.. கொட்டகையில் இருந்து ஆடுகள் தீக்குள் சிக்கி கத்தின.. அவைகளை வெளியேற்றி காப்பாற்றுவதற்காக பாட்டியும் கொட்டகைக்குள் நுழைந்தார்.
இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்ததே காங்கிரஸ்தான்..எச் ராஜா கடும் ஆவேசம்
ஆனால் தீயின் வேகத்தில் அவரால் அது முடியவில்லை.. கொட்டகைக்குள்ளேயே அஞ்சம்மாள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் காப்பாற்ற சென்ற 15 ஆடுகளுமே தீயில் கருகி இறந்தன.
தகவலறிந்து வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கொசுவை விரட்ட போடப்பட்ட புகை.. தீ பிடித்ததில்...15 ஆடுகளுடன் மூதாட்டியும் சேர்ந்து அந்த தீயில் எரிந்து கருகிய சம்பவம் நாகை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.