கெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று.. ஒன்று கூடிய ஊர் மக்கள்.. நாகையில் என்ன நடந்தது?
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கெயில் குழாயில் இருந்து திடீரென காற்று வெளியேறியதால் அதை பார்க்க மக்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த சம்பவம் நாகையில் பெரியபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பல ஊர்களில், வயல் பகுதிகளில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அவ்வப்போது எரிவாயு குழாய்கள் வெடித்து அதில் நெருப்பு வெளியாவது வழக்கமாகி வருகிறது.
அதிலும் நாகை மாவட்டத்தில் நிறைய எரிவாயு குழாய்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இதில் ஒரு குழாயில் இருந்து வெளியான புகைதான் தற்போது செய்தியாகி உள்ளது.
எங்கு நடந்தது
நாகை மாவட்டம் மேமாத்தூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு தற்போது கெயில் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு அந்த கிராமத்தை சுற்றி குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்க வேண்டும். இதில் பாதி தூரம் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
என்ன சத்தம்
இங்கு இந்த பணிகள் நடந்து வரும் நிலையில், திடீரென மேமாத்தூர் கிராமத்தில் இருந்து பெரிய சத்தம் கேட்டது. பெரிய அளவில் வெடி வெடித்தது போல சத்தம் கேட்டது. வானத்திலும் சிவப்பு நிறத்தில் புகை போல மூட்டம் தெரிந்தது. இதை பார்த்ததும் அருகே இருந்த மக்கள், அந்த ஊர் மக்கள் என்று எல்லோரும் மொத்தமாக அந்த பகுதியில் கூடினார்கள்.
மக்கள் அச்சம்
அந்த இடத்தில் இருந்து கேஸ் வெளியேறி இருக்குமோ என்றும் மக்கள் அச்சம் அடைந்தனர். ஹைதராபாத் கேஸ் கசிவு சம்பவம் நினைவிற்கு வரவே மக்கள் பதற்றத்திற்கு உள்ளானார்கள். இது தொடர்பாக தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தை போக்கும் விதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த குழாயில் இருந்து வெளியான காற்று கேஸ் கசிவு கிடையாது.
சுத்தம் செய்கிறார்கள்
அந்த குழாயை சுத்தம் செய்யும் பொருட்டு அதில் கம்பிரசர் கேஸ் கொடுக்கிறார்கள். உள்ளே இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய கம்பிரசர் காற்று அடித்து உள்ளனர்.இதுதான் இவ்வளவு உயரத்திற்கு சென்றுள்ளது. இதனால்தான் அங்கு சத்தமும் பெரிய அளவில் வந்து இருக்கிறது. மற்றபடி இன்னும் அந்த குழாயில் கேஸ் நிரப்பப்படவில்லை. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கெயில் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.