"வேதாரண்யம் தவிர வேறு எங்கும் பாதிப்புகள் இல்லை" என கூறிய அமைச்சரை முற்றுகையிட்டு காரை உடைத்த மக்கள்
Recommended Video
நாகை: வேதாரண்யம் தவிர வேறு எந்த பகுதியிலும் கஜா புயலால் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதை அடுத்து அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர்.
கஜா புயல் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனால் வேதாரண்யம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. சுமார் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் வீடுகள், குடிசைகள் சேதமடைந்தன.
அமைச்சர் பேச்சு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 151 கிராமங்களில் கஜா புயலால் லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் தவிர பிற பகுதிகளில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஓ எஸ் .மணியன் பேசியதாக தகவல் பரவியது.
கேட்டனர்
இதனை அடுத்து அமைச்சர் செல்லுமிடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் பாதிப்புக் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை எப்படி கூறலாம் என மக்கள் கேட்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
இந்நிலையில் வேட்டைக்காரனிருப்பு அருகே கன்னித்தோப்பு கிராமத்தில் அவர் நிவாரண பணிகளை பார்வையிட சென்றபோது திடீரென அவரது காரை மக்கள் சூழ்ந்தனர். அப்போது அமைச்சர் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அமைச்சருடன் வந்தவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
பதற்றம்
இதில் அமைச்சரின் கார் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது. அமைச்சர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து சென்றார். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மக்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவியது.