முதல்வர் வருவதால் உங்களை அனுமதிக்க முடியாது... பிரேமலதா விஜயகாந்திடம் போலீஸ் கட் அன்ட் ரைட்..!
நாகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது.
புயல்-மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தமிழக அரசின் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரத்தில் உள்ள முகாம் ஒன்றுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களை சந்திப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு அனுமதி மறுத்த போலீஸார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த முகாமில் தங்கியுள்ள மக்களை சந்திக்க வரவுள்ளார் என்றும் அதனால் உங்களை அனுமதிக்க முடியாது எனவும் பிரேமலதாவிடம் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து தேமுதிகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கோபம் கொப்பளிக்க அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் பிரேமலதா விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக கருதப்படும் சூழலில் இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விஜயகாந்த் மகனை முன்னிறுத்தும் தேமுதிக... விருத்தாசலம் தொகுதியில் களமிறங்குகிறாரா விஜய பிரபாகரன்...?
போலீஸார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சட்டநாதபுரம் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கவிருந்த நிவாரணப் பொருட்களை வேறு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கச் சென்றார் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிகவை கழற்றிவிடுவதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு எனத் தெரியவில்லை. இதனிடையே ஜனவரி மாதம் கூட்டணி நிலைப்பாடு குறித்து தேமுதிக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.