அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. லீவு கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ்காரர் தற்கொலை
Recommended Video
நாகப்பட்டனம்: உடல்நிலை சரியில்லாத தாயை கவனிக்க விடுமுறை கேட்டும் அது கிடைக்காததால் மனம் வேதனை அடைந்த போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் நாகையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் மாமணி (45). இவர் மயிலாடுதுறையில் உள்ள மதுவிலக்கு பிரிவில் கோர்ட் வழக்குகளை பார்க்கும் பணியில் இருந்து வந்தார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் மாமதி (12) என்ற மகளும், சுவைமணி (9) என்ற மகனும் உள்ளனர்.
மாமணியுடன் தந்தை சுப்பிரமணியன், தாய் சரோஜினி ஆகியோரும் வசித்து வந்தனர்.
மாமணியின் தாய் சரோஜினிக்கு சில தினங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. கடந்த வாரம் தனது தாயின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து இன்ஸ்பெக்டரிடம், மாமணி போனில் லீவு கேட்டதாக கூறப்படுகிறது.
நாகூர் சந்தன கூடு விழாவில் இருந்த இன்ஸ்பெக்டர் விடுமுறை கிடையாது என கூறி சட்டென போனை துண்டித்து விட்டார். இதனால் மனமுடைந்த மாமணி 6 நாள் விடுமுறை கேட்டு விடுமுறை கடிதத்தை எழுதி காவல் நிலையத்தில் வைத்து விட்டு தேத்தாகுடிக்கு சென்று விட்டார். ஊருக்கு வந்த அவர் தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார்.
மீண்டும் பணிக்கு செல்ல ஆயத்தமாகி காவல்நிலையத்திற்கு போன் செய்து தனது விடுமுறை எடுத்ததற்கு அனுமதி கிடைத்து விட்டதா? என சக போலீசாரிடம் விசாரித்துள்ளார். அனுமதி கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்ததையடுத்து, மன உளைச்சலில் இருந்த மாமணி நேற்று முன்தினம் வீட்டிலேயே விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாமணி இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.