கள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்!
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மருத்துவர் என காரில் ஸ்டிக்கர் ஒட்டி கள்ளக்காதலியை பார்க்க வந்த தொழிலதிபர், கள்ளக்காதலி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் தவிற, மற்ற அனைத்து விதமான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையும் மீறி பலர் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். மேலும் சிலர் மருத்துவர், ஊடகம், போலீஸ் என போலி ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டிக்கொண்டு ஜாலியாக உளா வருகின்றனர். அப்படியொரு நூதன சம்பவம்தான் நாகை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் அமுதா. தனது கணவரை பிரிந்த அமுதா (37). மலேசியா நாட்டிற்கு உணவகத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உணவக உரிமையாளர் அப்துல் அகமது மைதீன் (57). என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்துல் அகமது மைதீனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே அமுதா கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வந்து தலைஞாயிறில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்கள் கழித்து அப்துல் அகமது மைதீனும் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் அமுதாவை சந்திக்க நினைத்த அப்துல் அகமது மைதீன், ஊரடங்கு உத்தரவு காரணமாக போலீஸ் கெடுபிடி அதிகம் இருக்கும் என்பதால், ராமநாதபுரத்திலிருந்து, சொகுசு காரில் மருத்துவம் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, தலைஞாயிறு வந்து, அமுதா வீட்டில் தங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அமுதா வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அதன் பின்னர் அந்த வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. வீட்டில் இருந்த அமுதா, அப்துல் அகமது மைதீன் மற்றும் அமுதாவின் மகன், மகள் ஆகிய நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.
அப்துல் அகமது மைதீன் ராமநாதபுரத்தில் இருந்து வந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு வேறு போடப்பட்டுள்ளது.