கருப்பு கொடிக்கு தனி பெருமை உள்ளது.. அதை மோடிக்கு காட்ட மாட்டோம்.. சீமான் நச்
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட மாட்டோம் என்று சீமான் கூறியுள்ளார்.
நாகை: "பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடியெல்லாம் காட்ட மாட்டோம்.. கருப்புக் கொடிக்கென்று ஒரு பெருமை இருக்கு.. அதை சிறுமைப்படுத்த விரும்பவில்லை" என்று சீமான் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் தலைவர்களில் ஒருவர்தான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கஜா பாதித்து இன்னும் மோடி தமிழகத்துக்கு வரவில்லை என்றும், பட்டேல் சிலை வைக்க மூவாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்போது, 350 கோடியை 8 மாவட்ட வேளாண்குடி மக்களுக்கு, இழப்பீடாக ஒதுக்குகிறதே என்று வேதனை தெரிவித்து வந்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி வரவில்லை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். அவர் பேசியபோது, "புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்திக்க வரவில்லை.
எதிர்க்க மாட்டோம்
ஆனால் தேர்தல் பிரச்சார வாக்கு வங்கிக்காக தமிழகம் வர இருப்பது இங்குள்ள மக்களை அவமதிப்பதாகவே உள்ளது. அப்படி தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி எல்லாம் காட்டமாட்டோம்.
சிறுமைபடுத்த மாட்டோம்
கருப்பு கொடிக்கென்று தனிப்பெருமை உள்ளது. அதை பிரதமருக்கு எதிராக பயன்படுத்தி சிறுமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்காமல் செய்வது தான் எங்கள் நாம் தமிழர் கட்சியின் நோக்கம்" என்றார்.