மண்ணின் மைந்தர்களுக்கு பணி... தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் -தமிமுன் அன்சாரி போர்க்கொடி
நாகை: தமிழகத்தில் காலியாக உள்ள மத்திய மற்றும் மாநில அரசு பணியிடங்களுக்கு மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வட இந்தியர் ஆதிக்கம் பெருகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அசாம் தேர்தல்.. ரஞ்சன் கோகாய் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு.. தருண் கோகாய் கணிப்பு!
ஆபத்து நிறைந்தது
நடுவண் அரசின் அமைச்சரவை கூட்டத்தில் 19.08.2020 அன்று மத்திய அரசின் பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அரசு பணியாளர் தேர்வு முகமை (NRA) அமைக்கப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பணிகளில் சேர்பவர்களுக்கு இது எளிதானது போல தோன்றினாலும், இது மாநில அரசுகளின் பணியாளர் தேர்வாணயங்களை பலமிழக்க செய்யக் கூடிய ஆபத்துகள் நிறைந்ததாக உள்ளது.
பணியாளர் தேர்வுத்துறை
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது பற்றி கூறியுள்ள ஒரு கருத்து பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.தற்போது ரயில்வே, வங்கி பணி, மத்திய அரசின் பணியாளர் தேர்வுத்துறை ஆகியவற்றுக்கு நடைபெறும் இத்தேர்வு மத்திய அரசின் இதர துறைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றுள்ளார்.
இனி வரும் காலங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்வாணயங்கள், தனியார் துறை ஆகியவற்றுக்கும் , இதில் பெறும் தகுதி தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு பணியாளர் தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
எதிர்க்க வேண்டும்
இதன் மூலம் தமிழகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதுடன், அயலாரின் ஆதிக்கம் ஒங்கவும் இது மறைமுகமாக துணை போகும். தமிழகத்திற்கு மட்டுமல்ல, இது வேறு பல மாநிலங்களுக்கும் ஆபத்தானதாகவே இருக்கிறது. எனவே, மத்திய அரசின் இம்முடிவை தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
அன்சாரி வலியுறுத்தல்
சமீபத்தில் மத்திய பிரதேச பாஜக அரசு மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு என பிரகடனம் செய்துள்ளது.ஏற்கனவே குஜராத், கர்நாடகா மாநில அரசுகளும் இதை சட்டமாக்கியுள்ளன.தற்போது தமிழகத்தில் மத்திய அரசின் பணியிடங்களில், வட இந்தியர் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில், மத்திய அரசின் NRA தொடர்பான முடிவு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் பணியிடங்களில் 90 சதவீதம் மண்ணின் மைந்தர்களுக்கே என்ற சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.