குளம் தொடர்பாக கோரிக்கை வைத்த பாஜகவினர்... நிறைவேற்றிக் கொடுத்த தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ
நாகை: ஊர்குளம் தொடர்பாக தாங்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக நாகை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தமிமுன் அன்சாரியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரியிடம் நாகை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் சந்தோஷ், தனது ஊர் கோயில் குளம் தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருக்கிறார். அதனை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிமுன் அன்சாரி அதனை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இதனால் பூரிப்படைந்த நாகை மாவட்ட பாஜக இளைஞரணிச் செயலாளர் சந்தோஷ், தமிமுன் அன்சாரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து குளம் விவகாரத்தில் தமிமுன் அன்சாரி காட்டிய அக்கறைக்கும், உதவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.
நெருக்கடிக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளோம்... ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதனிடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கலசம் சேதம் அடைந்து அது கீழே விழுந்த நிலையில், அதனை உடனடியாக சீரமைத்து பொருத்த தமிமுன் அன்சாரி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதனால் இவர் மீது பாஜக, இந்து முன்னணி உட்பட அனைத்து தரப்பினரும் நல்ல அபிப்ராயம் வைத்து நட்பு பாராட்டி வருகின்றனர்.
மதத்தையும், மக்கள் பணியையும் ஒன்றாக இணைத்து தமிமுன் அன்சாரி குழப்பிக்கொள்வதில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால் அத்திவரதர் தரிசனத்திற்கு நாகை தொகுதிகுட்பட்ட ஏராளமானோருக்கு சிறப்பு பரிந்துரைக் கடிதம் வழங்கினார் எனவும் அவரை பற்றி மனிதநேய ஜனநாயக கட்சியினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.