உள்ளத்தை உலுக்கிய கீழவெண்மணி படுகொலை... 51-வது நினைவு தினம் இன்று
நாகை: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கீழவெண்மெணி கிராமத்தில் உயிரோடு 44 பேர் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட 51-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அதையொட்டி வெண்மணி கிராமத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் அஞ்சலி செலுத்தி அவர்களை நினைவுகூறுகின்றனர்.
விவசாய கூலித்தொழிலாளர்கள் நிலக்கிழார்களிடம் அரைப்படி நெல்லை கூடுதலாக கேட்டதற்காக இந்த கொடூர கொலை அரங்கேறியது.
நெற்களஞ்சியம்
இப்போது நாகை மாவட்டத்தில் உள்ள கீழவெண்மணி கிராமம், 1968-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. நெற் களஞ்சியமான தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு கேட்டு போராட தொடங்கிய காலம் அது. இதனால் நிலக்கிழார்களும் விவசாய கூலிகளும் எதிரெதிர் துருவங்களாக மாறினர்.
பேச்சுவார்த்தை
கூலி உயர்வாக நிலக்கிழார்கள் அரைப்படி நெல்லை அதிகமாக தர வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதை நிலச்சுவான் தாரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கைகட்டி நின்றவர்கள் நம்மிடம் கை நீட்டி கேள்வி கேட்பதா என எண்ணிய பண்ணையார்கள் வெண்மணி கிராமத்தை சேர்ந்த கணபதி, முத்துக்குமார் ஆகிய இருவரை கட்டி வைத்து அடித்தனர்.
துப்பாக்கிச்சூடு
இந்த நிகழ்வு கீழவெண்மணி கிராமமக்களை கொந்தளிக்க வைத்தது. வெகுண்டெழுந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் சில நிலச்சுவான் தாரர்கள் துப்பாக்கிச்சூடும் நடத்தும் அளவுக்கு சென்றனர். இதனால் கீழவெண்மணி கிராமமே கலவரகாடாக மாறியது. இந்நிலையில் உயிருக்கு அஞ்சி ராமையா என்பவரின் குடிசைக்குள் 44 பேர் தஞ்சம் புகுந்தனர்.
44 பேர் படுகொலை
இதையறிந்த கொடூர அரக்கன்கள் அந்த குடிசையில் மண்ணெண்ணையை ஊற்றி முன் கதவில் பூட்டை போட்டு தீ வைத்து கொளுத்தினர். அதில் 44 உயிர்கள் பறிபோயின. இந்தச் சம்பவம் தமிழக வரலாற்றில் நீங்காத கரும்புள்ளியாக இருப்பதோடு நினைத்துப்பார்க்கும் போதே பதைபதைப்பை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது.