தாமதமாகும் மருத்துவக் கல்லூரி.. நாகையில் கடையடைப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
நாகப்பட்டினம்: நாகையில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை விரைவாக தொடங்கக்கோரி 3 தாலுக்காவில் 10 ஆயிரம் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்குள் செல்லாமலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாகை அருகே ஒரத்தூரில் மருத்துவக் கல்லூரியை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மருத்துவக் கல்லூரி பணிகளை விரைவாக துவங்க வலியுறுத்தி நாகை, கீழ் வேளுர், வேதாரண்யம் ஆகிய 3 தாலுக்காவை சேர்ந்த திட்டச்சேரி, நாகூர், திருமருகல், கீழையூர், ஆறு காட்டுத்துறை, புஷ்பவனம், விழுந்த மாவடி போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர்பட்டினச்சேரி போன்ற மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் 2 ஆயிரம் விசைப்படகுகள் 7 ஆயிரம் பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் முழுமையாக ஓடவில்லை. புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பயணிகளின் வருகை மிகவும் குறைந்துள்ளதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாகை மக்கள் நகரில்
மிக பிரம்மாண்ட பேரணியும் நடத்தியுள்ளனர்.